சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இணங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று (23) தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறிது நேரம் கலந்துரையாடினார். அவர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத்,பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஸ்கிரிய மகா விகாரையின் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர்கள் மற்றும் சங்கச் செயற்குழு உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்ததுடன், மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.