கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைரம் பதித்த மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் சுமார் 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவை பெட்டகத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவத்தையடுத்து இல்ல தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்திற்குச் சென்று ஏப்ரல் 27 ஆம திகதி திரும்பிய சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தூதுவர் வெளியேறிய பிறகு, சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒரு திறப்பைப் பயன்படுத்தி அவரது பெட்டகத்தை திறந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
விசாரணைகளைத் தொடர்ந்து, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட திறப்பை உருவாக்கியதாகக் கூறப்படும் ஒரு பூட்டு தொழிலாளியையும் பொலிஸார் கைது செய்தனர்.
வெலிகமவில் சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு சேவை அதிகாரிகளில் ஒருவரிடமிருந்து, திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக பல மோதிரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
திருட்டு நடந்த நேரத்தில், இரண்டு பெண் வீட்டு வேலைக்காரர்களும் ஒரு சமையல்காரரும் வீட்டில் இருந்தனர். அவர்கள் விசாரிக்கப்பட்டு, பின்னர் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மூன்று சந்தேக நபர்களும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.