ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலில் நடாத்திய தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் கடந்த அக்டோபர் 07ஆம் திகதி முதல் காசாவில் போரினை ஆரம்பித்தது.
ஹமாஸை இல்லாதொழிக்க இஸ்ரேல் ஆரம்பித்த 100-வது நாளை நெருங்கும் இப்போரில் சிறார்கள், பெண்கள் உட்பட இதுவரை சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களது உயிர்களை பலி வாங்கியுள்ளனர். மேலும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு கொடுத்து வருகின்றன.
அதேவேளை, ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹவுதி (Houthi ) படையினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.
அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.
இந்நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கருத்து தெரிவித்தார்:
ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல்
நடத்துகின்றன. செங்கடல் பகுதியை “ரத்த கடல்” (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்” என எர்டோகன் தெரிவித்துள்ளார்.