செ.திவாகரன்
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் தொடர்பாக, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன் பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிக்கோயா ஆதார வைத்திய சாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது பெண்ணை இரவு நேரத்தில் மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அபோஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ். ஹரினி என்ற பெண், குடும்ப தகராறு காரணமாக கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் நிபுணரிடம் ஒப்படைத்தனர். அன்றிரவு சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில்
பிண அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அன்று அதிகாலை பிணவறைக்குள் நுழைந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று ஊழியர்கள் பூட்டுகளை உடைத்து உடலில் இருந்த துணிகள் அகற்றி காணப்பட்டதாக வைத்தியசாலையின் பிரேத அறை மேலாளர் டிக்கோயா ஆதார வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் சார்ந்த தலைவர்கள் குழு (03) காலை டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஹட்டன்- பொகபகவந்தலாவ பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டு மூன்று நபர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
