யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் என்ற 37 வயதுடையவரே உயிரிழந்தவராவார்.
நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே குறித்த நபர் உயிழந்தமை குறிப்பிடத்தக்கது