குஜராத் மாநிலம் வதோரா நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஹார்னி என்ற ஏரியில் நேற்று (18) 20 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுடன் படகு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்தனர்..
சுற்றுலா நிமித்தமாக வந்த குறித்த 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் மதியம் கவிழ்ந்துள்ளது. இதில் 7 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
மீட்பு படையினரும் தீயணைப்பு படையினரும் எஞ்சியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட ஒரு மாணவனுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஏரியின் அடிப்பகுதியில் சேறுகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படகில் எத்தனை பேர் பயணித்தார்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் பேர் பயணித்தார்களா, சுமார் 30 பேரை ஏற்றிச் செல்லும் அளவுக்கு படகு திறன் கொண்டதாக இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, “வதோதரா படகு விபத்து சம்பவத்தில் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த உடனே மாவட்ட ஆட்சியர், பொலிஸ் ஆணையர், நகராட்சி ஆணையர் மற்றும் 60க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.