மாணவனால் வேகமாக செலுத்தப்பட்ட கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து

பம்பலப்பிட்டி Marine வீதியில் தனியார் பல்கலைக்கழகத்தின் 18 வயதான மாணவன் கடுமையான வேகத்துடன் சொகுசு SUV ஜீப்பினை செலுத்தி இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதியதால் தூக்கி எறிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மாணவன் மயிரிழையில் தப்பியுள்ளார் இச்சம்பவம் 5 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஜீப்பை ஓட்டி வந்த மாணவன் அதிர்ச்சி அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி கடற்கரை வீதியில் பயணித்த சொகுசு ஜீப் கட்டுப்பாட்டை இழந்ததால் வலது பக்கம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் மோதி தூக்கி எறிந்து பின்னர் மின்கம்பத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது சொகுசு ஜீப்பில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் மூன்று வாகனங்களும் மின்கம்பமும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் விபத்து பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version